நாட்டை மிகவும் மோசமான முறையில் நிர்வகித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை துரத்தியடிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இனிமேலும் மக்கள் அமைதியாக இருப்பது நாட்டுக்கு ஆபத்தாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது. எனினும் இறக்குமதி செலவு 20 பில்லியன் டொலர்களாகும். இவ்வாறான ஏற்றுமதி – இறக்குமதி இடைவெளிக்கு மத்தியில் டொலரின் பெறுமதி 270 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இலங்கை தற்போது பாரிய பொருளாதார அனர்த்தத்தினை எதிர்கொண்டுள்ளது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்கள் அவர்களது வீட்டு நிலத்தை சுத்தப்படுத்த உதவுமே தவிர, பொருளாதார நெருக்கடிகளுக்கு எந்தவகையிலும் தீர்வாக அமையாது.
இது ராஜபக்ஷ குடும்பத்தின் நாடு அல்ல. பஷில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் குடும்பத்தினர் அனைவரும் அமெரிக்காவிலேயே உள்ளனர். இவர்கள் தமது தொழிலுக்காக இங்கு தங்கியுள்ளனர்.
பஷில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு செல்வதற்கு இரு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இந்தியா அதனை நிராகரித்துவிட்டது.
தற்போதும் மூன்றாவது முயற்சியாக மிண்டும் இந்தியா செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.