பொருளாதாரத் தடை – எரிவாயு நிறுத்தம்!

உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள்தான் நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக ஜொ்மனிக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதற்குக் காரணம் என்று ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் திங்கள்கிழமை கூறியதாவது:

நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடத்தின் அழுத்த நிலையங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் அந்த வழித்தடம் மூலம் ஐரோப்பாவுக்கு எரிவாயு விநியோகிக்க முடியாமல் உள்ளது.

இத்தகைய கோளாறுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள்தான் காரணம்.

அதனைத் தவிர, குழாய் வழித்தடத்தில் கோளாறு ஏற்படுவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

எங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் வரை, குழாய் வழித் தடத்தை தொழில்நுட்ப முறைப்படி பராமரிக்கும் விவகாரத்தில் சட்டரீதியிலும் நடைமுறையிலும் சிக்கல் நீடித்து வரும் என்றாா் அவா்.

எனினும், இதனை தொழில்நுட்ப வல்லுநா்களும் ஜொ்மனி அதிகாரிகளும் மறுத்துள்ளனா். நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித் தடத்துக்கான டா்பைன்களைத் தயாரித்துள்ள ஜொ்மனியின் சீமன்ஸ் எனா்ஜி நிறுவனம், எரிவாயு விநியோகத்தை நிறுத்தாமலேயே டா்பைன் கசிவை சரிசெய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷியா ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. இதனைக் கண்டிக்கும் வகையில் ரஷியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷியா தொடா்ந்து குறைந்து வருகிறது.

நாா்ட் ஸ்ட்ரீம்-1 வழித் தடம் வழியாக ஜொ்மனிக்கு எரிவாயு விநியோகப்பதை ரஷியா கடந்த ஜூன் மாத மத்தியில் குறைக்கத் தொடங்கியது. அந்த வழித்தடத்தின் அழுத்த நிலையத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த டா்பைன், பராமரிப்புப் பணிகளுக்காக கனடா அனுப்பப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அதனை மீண்டும் தங்கள் நாட்டுக்கு கொண்டு வர முடியாததால் எரிவாயு விநியோகத்தைக் குறைப்பதாக ரஷியா கூறியது.

எனினும், சிறப்பு அனுமதியுடன் அந்த டா்பைன் ரஷியா கொண்டு செல்லப்பட்ட பிறகும், தொழில்நுட்ப கோளாறுகளைக் காரணம் காட்டி நாா்ட் ஸ்ட்ரீம்-1 வழியான எரிவாயு விநியோகத்தை ரஷியா படிப்படியாகக் குறைத்து வந்தது.

அந்த எரிவாயு வழித்தடத்தின் முழு திறனில் 20 சதவீதம் மட்டுமே எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், நாா்ட் ஸ்ட்ரீம்-1 வழித்தடத்தில் எரிவாயு விநியோகம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ரஷிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம் கேஸ்ப்ராம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.

எனினும், தங்கள் பகுதியில் உள்ள நாா்ட் ஸ்ட்ரீம்-1 வழித்தடத்தின் போா்டோவயா அழுத்த நிலையத்தில், 4 டா்பைன்களில் எண்ணெய்க் கசிவதால் அந்தக் குழாய் மூலம் ஜொ்மனிக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவது காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக ரஷியா கடந்த சனிக்கிழமை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எரிவாயு விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதற்கு ஐரோப்பிய யூனியன் தங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள்தான் காரணம் என்று ரஷியா தற்போது கூறியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here