ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் இதுவரை எந்தவித பிரச்சினையும் கிடையாது என இலங்கை தேயிலை சபை தெரிவிக்கின்றது.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்கான கொடுப்பனவு கிடைப்பதில் மாத்திரம் தாமதம் ஏற்படக்கூடும் என சபையின் தலைவர் ஜயம்பத்தி மொல்லிகொட தெரிவிக்கின்றார்.
இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ஈராக், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.
2021ம் ஆண்டு காலப் பகுதியில் ரஷ்யாவிற்கு இலங்கையிலிருந்து சுமார் 29 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், அதனூடாக நாட்டிற்கு 24,822 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
இதேவேளை, இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் யுக்ரேன், 18வது இடத்தில் உள்ளது.
யுக்ரேனுக்கு, இலங்கையிலிருந்து 2021ம் ஆண்டு 4 மில்வியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதுடன், அதனூடாக 4,279 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
பல நாடுகளினால் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளமையினால், சர்வதேச வங்கிகளின் ஊடாக ரஷ்யாவுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில் தற்போது சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.