கொவிட் தொற்று நாட்டிலிருந்து நீங்காத நிலையில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய்ப்பரவி வருவதாக பொரல்ல ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் அதிகமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்தவகையில் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 30 சதவீத நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 28 சதவீத நோயாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2 அல்லது 3 நாட்களுக்கு தொடச்சியான காய்ச்சல் நிலைமைகள் காணப்படும் போது கொவிட் அறிகுறிகள் என நினைத்து மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல அச்சப்படுகின்றமையினால் டெங்கு நோய்க்காரணமாக அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொவிட் தொற்றுக்கு எதிராக நோயெதிர்ப்புச் சக்தி காணப்பட்டாலும் டெங்கு நோய்க்கு அவ்வாறான நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பதால் ஆரம்பத்திலேயே நோயை இனங்கண்டு குணப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் 20 வருடங்களிற்கு முன்பதாக டெங்குவினால் 10 சதவீதமானவர்கள் மரணமடைந்துள்ளனர் எனவும் 10 வருடங்களிற்கு முன்பும் அந்நிலைமை 1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் தற்போது டெங்கு நோய் இறப்பு வீதம் 0.1 வீதமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நோய் நிலைமைகள் குறித்து போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும எனவும் கொவிட் தொற்று காரணமான டெங்கு நோய் நிலைமைகளை மறந்து விடக் கூடாது எனவும் தெரிவித்தார்.