நீண்ட காலமாக இரண்டு கட்சிகள் நாட்டை ஆட்சிசெய்தமையால் நாடு முகம்கொடுக்கக்கூடிய அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்காமை காரணமாவே இன்று அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உற்பத்தி குறைவடைந்துள்ளதோடு டொலர் வருமானமும் குறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் ஆகும் போது நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடுகள் அதிகரிக்குமென்று பலர் எதிர்வுகூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் பாரிய உணவுத்தட்டுப்பாடொன்று ஏற்படும் வாய்ப்பிருப்பதால் இளைஞர்கள் குறைவாக சாப்பிட்டு வயோதிபர்களுக்கும், சிறார்களுக்கும் அதிகளவிலான உணவை வழங்குமாறு விவாசாய அமைச்சின் செயலாளர் கடந்த தினங்களில் பகிரங்கமாக தெரிவித்திருத்ததாகவும், இதன் காரணமாக அவருக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நாட்டை நிர்வகித்த ஆட்சியாளர்கள் கடன்களைப் பெற்று நாட்டை அபிவிருத்திச் செய்வதற்குப் பதிலாக தங்களுடைய வம்சத்தை அபிவிருத்திச் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே நாடு இன்று கடன் சுமைக்கு தள்ளப்படுவதற்கு இயற்கை அனர்த்தங்கள் காரணம் அல்ல என்றும் நாட்டின் ஆட்சியாளர்களே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.