இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (25) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
அரையிறுதிச் சுற்றுக்கான நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின், இலங்கை அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இப்போட்டிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனையாகி முடிந்துள்ளதால், பிரேமதாச விளையாட்டரங்கின் நுழைவாயில்கள் பிற்பகல் 4 மணிக்கே திறக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இம்முறை டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணி பங்கேற்ற தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 51 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதன் காரணமாக, அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இப்போட்டிக்காக இரு அணிகளும் நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டன.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை 28 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், அதில் 16 போட்டிகளில் நியூசிலாந்தும், 9 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 6 டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், அதில் 3 போட்டிகளில் நியூசிலாந்தும், 2 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.
இதற்கிடையே, இன்று நடைபெறும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்போட்டியைப் பார்வையிட அதிகளவிலான இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இது தொடர்பில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப் பொலிஸார் தற்போது தீர்மானித்துள்ளனர்.