யாழில். இ.போ.ச நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த குறித்த பேருந்தில், இளைஞன் ஒருவர் மதுபோதையில் பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்துள்ளார்.

இதன்போது, நடத்துனர் அவரைப் பேருந்தில் இருந்து இறங்குமாறு அல்லது பாதுகாப்பாக ஏறிப் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் நடத்துனருக்கும், மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞன் நடத்துனரைத் தாக்கியுள்ளார்.

இதனைக் கண்ட பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் இது குறித்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் அந்த இளைஞன் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here