இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மன்னார் தெற்கு கடற்பரப்பில் இழுவைப் படகு ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிந்த 10 இந்திய மீனவர்களை இன்று (3) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் அவர்களை இன்று (3) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.