
சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராட்டினை தெரிவித்துள்ளார்.
சீன தூதுவர் Qi Zhenhong ஐ அலரி மாளிகையில் நேற்று (27) சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று நிலைமையை கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு வாழ்த்து தெரிவித்த சீன தூதுவர், அதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீன மக்கள் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கு இடையிலான 10 பில்லியன் சீன யுவான் மதிப்பிலான இரு தரப்பு நிதி பரிமாற்ற ஒப்பந்தமானது, உலகளாவிய முதலீட்டாளர்களின் உணர்வை வலுப்படுத்தவும் இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என சீன தூதுவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு நிறைவு மற்றும் இறப்பர் – அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை ஆகியவற்றை குறிக்கும் 2022 ஆம் ஆண்டானது, இலங்கை – சீன இருதரப்பு உறவின் மிக முக்கியமான ஆண்டாக விளங்கும் என சீன தூதுவர் Qi Zhenhong இதன்போது தெரிவித்துள்ளார்.