அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமூலத்திற்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்” என்ற சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
மக்களுக்கு தகவல்களை வழங்கும், அலைவரிசைகளை அரசாங்கம் கட்டுப்படுத்துவது பாரதூரமான நிலைமையாகும் எனத் தெரிவித்தார்.
“இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக நாங்கள் பார்க்கிறோம்.”
இந்தச் சட்ட மூலம் இணையம் ஊடாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அந்தத் தகவல் சரியானதா அல்லது அதனால் ஏற்படும் பாரபட்சம் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதென்பதையும் ஆசிரியர் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
“கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை, அரசியல் அமைப்பு நமக்கு அளித்துள்ள உரிமை, தகவல் அறியும் உரிமை, பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை அழிக்கவே இந்தச் செயற்பாடுகள் செய்யப்படுகின்றன.” இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
