சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்(01).
1886 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலைநேரத்தில் 8 மணித்தியாலமாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர்.
பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65000 ஆக அதிகரித்தது.
1886 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி போராட்டத்தின் தீர்மானமிக்க தருணம்.
முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 தொழிலாளர்களின் உயிர் போராட்டத்திற்காக ஆகூதியாக்கப்பட்டது.
இந்த தாக்குதலை கண்டித்து மே மாதம் 4ஆம் திகதி தொழிலாளர்கள் ஹேமார்கட் சதுக்கத்தில் அணிதிரண்டனர்.
பொலிஸாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்தார்.
இந்தப் போராட்டம் மோதலாக உருவெடுத்ததுடன் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதை அடுத்து அது மேலும் உக்கிரமடைந்தது.
இந்த மோதலில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை இன்றும் உறுதியாக கூற முடியாது.
8 மணித்தியால கடமை நேரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களை எப்போதும் நினைவுகூற வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1889 ஆண்டு தீர்மானித்தது.
அதற்கமைய ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
கொழும்பு, கண்டி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று(01) அரசியல் கட்சிகளின் தொழிலாளர் தின கூட்டங்கள் இடம்பெறுகின்றன.