இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது.
இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நாளாந்தம் வீதிகளிலும், வர்த்தக நிலையங்களிலும், வரிசைகளில் காத்திருப்பதை காண முடிகின்றது.
உணவுப் பொருட்கள் முதல் சமையல் எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
அவ்வாறு பொருட்கள் சந்தையில் இருந்தாலும், அதன் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி செய்த 1970ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் பஞ்சம் நிலவியதாக கூறப்பட்டாலும், அதை விடவும் பாரிய நெருக்கடிகளை இன்று மக்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.