உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவை சந்தித்தார்.
கடற்படை தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதியை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
இந்திய இராணுவத் தளபதியும், இலங்கை கடற்படைத் தளபதியும் பரஸ்பர விருப்பங்கள், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு ஆயுதப்படைகள் தொடர்பிலான முக்கிய விடயங்களை பரிமாறிக்கொண்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
அத்துடன், இருவரும் பரிசுப்பொருட்களையும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.