சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களும், சோசலிசக் குழுக்களும் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஆதரவான நாளாக மே 1-ஐ அறிவித்ததை தொடர்ந்து இந்த நாள் தொழிலாளர் இயக்கத்துடன் தொடர்புடைய நாளாக மாறியது. கடந்த 1886-ஆம் ஆண்டில் மே முதல் நாள் அமெரிக்காவின் பிற நகரங்களில் நடைபெற்றது போலவே சிகாகோ நகரிலும் எட்டு மணி நேர வேலை நாள் கோரி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்றது.
இதனை அடுத்து பொலிஸார் போராடிய தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. சில தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. இதனை கலைக்க வந்த பொலிஸார் மீது குண்டு ஒன்று வீசப்பட தொழிலாளர் மீதான அடக்குமுறை தீவிரமானது. இறுதியில், வன்முறை முடிவதற்குள் 7 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர். நான்கு முதல் எட்டு பொதுமக்கள் இறந்ததாகவும், 30 முதல் 40 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையிலேயே ‘உழைப்பாளர் நாள்’ மே 1-ம் திகதி அனுசரிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகளை அனுபவித்தவர்கள், குறைந்த ஊதியம் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்றவற்றை அனுபவித்தனர். மேலும் பொலிஸ் தாக்குதலில் உயிர்விட்டவர்கள் அனைவரும் ஹேமார்க்கெட் தியாகிகள் என போற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹேமார்க்கெட் விவகாரம் தொழிலாளர் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை சூழல் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்க உதவியது.